32. அருள்மிகு பதஞ்சலிநாதேஸ்வரர் கோயில்
இறைவன் பதஞ்சலிநாதேஸ்வரர்
இறைவி கோலவளைக்கையம்மை
தீர்த்தம் சூரிய புஷ்கரணி
தல விருட்சம் வெள்ளெருக்கு
பதிகம் சுந்தரர்
தல இருப்பிடம் திருக்கானாட்டுமுள்ளூர், தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'கானாட்டம்புலியூர்' என்று அழைக்கப்படுகிறது. காட்டுமன்னார்கோயிலில் இருந்து ஓமாம்புலியூர் சாலையில் சென்று முட்டம் என்ற ஊரில் திரும்பி சுமார் 3 கி.மீ. தொலைவு சென்றால் கோயிலை அடையலாம். காட்டுமன்னார்கோயிலில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவிலும், ஓமாம்புலியூரிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
தலச்சிறப்பு

நடராஜப் பெருமானின் நடனக் கோலம் காண வேண்டி பதஞ்சலி முனிவர் வழிபட்ட தலமாதலால் இத்தலத்து மூலவர் 'பதஞ்சலிநாதேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

மூலவர் 'பதஞ்சலிநாதேஸ்வரர்' என்ற திருநாமத்துடன் அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். மிகச் சிறிய பாணம். அம்பாள் 'கோல்வளைக்கையம்மை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.

கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். தட்சிணாமூர்த்திக்கு பின்புறம் கல்லால மரம் இல்லை. பிரகாரத்தில் நிருதி விநாயகர், வள்ளி தேவசேனை சமேத சுப்ரமண்யர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, கஜலட்சுமி, சிவகாமி உடனுறை நடராஜப் பெருமான், நால்வர் பெருமக்கள், பதஞ்சலி முனிவர், நாகங்கள் நடுவே கிருஷ்ணன், சனீஸ்வரர், சூரியன், பைரவர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.

சித்திரை வருடப் பிறப்பின் முதல் மூன்று நாட்கள் சூரியனின் கதிர்கள் மூலவர் மீது விழுந்து சூரிய பூஜை நடைபெறுகிறது. பதஞ்சலி முனிவர், சூரியன் ஆகியோர் வழிபட்ட தலம்.

சுந்தரர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com